புதுடெல்லி: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே சார்பில் தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா பாதைகளில் இவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் பெட்டிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், தானியங்கி கதவுகள் மற்றும் பயோ-டாய்லெட் போன்ற வசதிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டின் அனைத்து பகுதிகளையும் இது இணைக்கும்,’ என்று அறிவித்தார்.