டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்காதது ஏன்? : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை : டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்காதது ஏன்? என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பெட்ரோல் விலை குறைத்ததால் 2 கோடி இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிதிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா,பட்ஜெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. டீசல் பக்கமும் உங்கள் கவனத்தை திருப்பி இருக்கலாம். டீசல் விலையை குறைத்தால் விவசாயிகள் சந்தோசப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விவசாயிகள், மீனவர்கள், போக்குவரத்து துறை, தனியார் வைத்துள்ள பெரிய கார்கள் டீசலில் ஓடுகிறது. அதேநேரம் 2 கோடி பேர் பெட்ரோல் மூலம் 2 சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையினருக்கும் மானியமாக டீசல் வழங்கப்படுகிறது. பெரிய சொகுசு கார்கள் தனியார் வைத்துள்ளனர். அதனால் பெட்ரோல் விலை குறைத்தால் உறுதியாக அதிகமானோர் பயனடைவார்கள் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. லாரிகளுக்கு டீசல் மானியம் கொடுத்தால் நேசனல் பெர்மிட் வைத்துக் கொண்டு இயக்கும் உரிமையாளர்களும் இதை தவறாக பயன்படுத்திவிட கூடாது. அதனால் எல்லாமே ஆய்வு செய்து தற்போது பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். டீசல் பயன்படுத்துபவர்களுக்கு வேறு வகையில் ஊக்கம் கொடுத்துள்ளோம்,என்றார்.

Related Stories: