புதுடெல்லி: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் 3 நாட்கள் அலைக்கழிக்கபட்ட தமிழக மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீகா பர்வீன், போலந்து தடகள போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அனுமதி வழங்கியுள்ளது. செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள போட்டி போலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது (ஆக. 23-28). இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த சமீகா பர்வீன் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். எனினும், போலந்து செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தகுதிச் சுற்றில் திறமையை நிரூபித்த சமீகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.