ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைக்கு வீட்டு மனை, ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ஏர்ரவாரிபாளையத்தை சேர்ந்தவர் ரஜினி, ஹாக்கி வீராங்கனை. இவர் தென் மாநிலங்களில் இருந்து ஒலிம்பிக் ஹாக்கியில் பங்கேற்ற ஒரே விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதோடு, 110 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்க போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியதற்கும், அணியின் வெற்றிக்கும் ரஜினி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனை விசாகப்பட்டினத்தில் உள்ள தலைமை செயலகத்தில் ஒலிம்பிக் ஹாக்கி வீராங்கனை ரஜினி தனது பெற்றோருடன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். அப்போது, ஒலிம்பிக்கில் சிறந்து விளங்கிய ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், முந்தைய அரசாங்கத்தில் ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட நிலுவை தொகையை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். மேலும், திருப்பதியில் 9,000 சதுரஅடி வீட்டுமனை, மாதந்தோறும் ரூ.40,000 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்தார்.

Related Stories: