அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சோதனை கண்டிக்கத்தக்கது: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள்,  திமுக அரசு அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும், மனதில் எழுகின்றன. துடிப்பான அதிமுக செயல்வீரர் எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, அதிமுக எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

* எடப்பாடியுடன் சந்திப்பு

மாஜி அமைச்சர் வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பிறகு நேற்று இரவு 9.30 மணிக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அவரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: