ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி: 45 இடங்களில் என்ஐஏ சோதனை

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் 15 மாவட்டங்களை சேர்ந்த 45 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று முதல் ஜம்மு -காஷ்மீரில் 45க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘தீவிரவாத செயல்களுக்காக நிதியுதவி வழங்கல் தொடர்பான வழக்கில், ஜம்மு -காஷ்மீரில்14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. ஜமாத்-இ-இஸ்லாமியின் வளாகத்தில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அமைப்பை ஒன்றிய அரசு 2019ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது.

ஆனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் ஜம்மு -காஷ்மீரில் தடையை மீறி நடந்து கொண்டிருந்தன. பாகிஸ்தான் சார்பு மற்றும் பிரிவினைவாத செயல்களை ஆதரித்து வருகிறது. டெல்லியில் இருந்து மூத்த டிஐஜி குழுவினர், நகருக்கு வந்தனர். அவர் தலைமையிலான குழுவினர் ஸ்ரீநகர், புட்காம், கந்தர்பால், பாரமுல்லா, குப்வாரா, பந்திபூர், அனந்த்நாக், ஷோபியன், புல்வாமா, குல்கம், ரம்பன், தோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கந்தர்பாலில் உள்ள ஜமாத்தின் மாவட்டத் தலைவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: