பாட்டவயல் சாலையில் பாலம் துண்டிக்கும் அபாயம்

பந்தலூர் : பந்தலூர் அருகே தொடரும் பலத்த மழையால் பெரும்பலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொளப்பள்ளி பாட்டவயல் சாலையில் பாலம் துண்டிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து நெல்லியாளம் டேன்டீ வழியாக பாட்டவயல் பகுதிக்கு செல்லும் சாலையில்  பாலம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு பாலத்தின் நடுவே மற்றும் அடிபாகம்  இடிந்து சேதம் ஏற்பட்டது. இந்நிலையில்  பழுதடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி மற்றும் அதிகாரிகளுக்கு  பல்வேறு கோரிக்கைகள் வைத்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும்  தற்போது பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், பாலத்திற்கு மேல் பகுதி வரை  மழைநீர் செல்வதாலும் பாலம் மேலும் பழுதாகி துண்டிக்கும் நிலையில்  உள்ளது.

நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஆகிய 2 பஞ்சாயத்துகளை இணைக்கும் பகுதியில்  ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பாலம் துண்டிக்கப்பட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: