திண்டிவனம் அருகே நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சரியாக பணி வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வழங்க வேண்டும், வேலை செய்த பணத்தை வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும், முன்பு வேலை செய்தவர்களுக்கு பணம் வழங்காமல் தற்போது வேலை செய்தவர்களுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளதால் அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி ஆவணிப்பூர் திண்டிவனம் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் மற்றும் டிஎஸ்பி கணேசன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி, டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் ஆவணிப்பூர் திண்டிவனம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: