மோதலால் ஏற்பட்ட கொலை சம்பவம்; மற்றொரு மல்யுத்த வீரர் கைது: டெல்லி காவல்துறை அதிரடி

புதுடெல்லி: டெல்லி சத்ராசல் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட மோதலில் 23 வயதுடைய மல்யுத்த வீரர் சாகர் தங்கர், சக மல்யுத்த வீரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது கொலை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சுஷில் குமாரின் நெருங்கிய உதவியாளரும் மல்யுத்த வீரருமான சுர்ஜித் க்ரூவால் என்பவரை கைது செய்தது.

இவர், தேசிய அளவில் டெல்லி அணிக்காக கடந்த 2018ல் தங்கப் பதக்கம் வென்றார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை பங்கேற்றவர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (சிறப்பு செல்) சஞ்சீவ் குமார் யாதவ் கூறுகையில், ‘தற்போது கைது செய்யப்பட்ட சுர்ஜித் க்ரூவால், சுஷில் குமாரின் நெருங்கிய உதவியாளராவார். இவர், தனது சொந்த கிராமமான பம்லாவுக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, அரியானாவின் பிவானி மாவட்டத்தில் சுற்றிவளைத்து பிடித்தோம்.  இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: