இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படம் வெளியிட்டு நடிகைக்கு பலாத்கார மிரட்டல்: ஓராண்டுக்கு பின் ஒருவன் கைது

கொல்கத்தா: இன்ஸ்டாகிராமில் கொல்கத்தா நடிகைக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த ஒருவனை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த திரைப்படம் மற்றும் டிவி சீரியல் நடிகை பிரத்யுஷா பால் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாக கடந்த ஓராண்டுக்கு முன் மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக கடந்த 2020 ஜூனில் லால்பஜார் போலீசுக்கு மின்னஞ்சல் மூலம் நடிகை பிரத்யுஷா பால் புகார் அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து அவருக்கு கடந்த ஒரு வருடமாக சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. நடிகையின் படங்களை மார்பிங் செய்து, நிர்வாணமாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர். இதுதொடர்பாக, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் லால்பஜார் போலீசார் தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக நடிகை பிரத்யுஷா பாலிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார், அதன் அடிப்படையில் பெல்காரியாவை சேர்ந்த இஷிக் மஜும்தார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நடிகைக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த குற்றவாளி, போலி ஐடி மூலம் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இணைய ஐபி முகவரியின் அடிப்படையில், அவனை கைது செய்துள்ளோம். இவரை போன்றே, மேலும் சிலர் நடிகைக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்ததால், அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: