களியக்காவிளை: கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டிப்பர் லாரிகள் ஜல்லி, பாறைப்பொடி, எம்சாண்ட், கற்கள் உள்ளிட்ட கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிக லோடுடன் சென்ற வாகனங்களுக்கு வருவாய் துறை ரூ.40 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2 தினங்களுக்கு முன் மாநில அரசு தரப்பில் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தியும், முறைகேடாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணியளவில் குமரி மாவட்ட கேரளா எல்லை பகுதி சோதனை சாவடிகளான படந்தாலுமூடு, களியக்காவிளை, நெட்டா, பளுகல் உள்ளிட்டப பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.