பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் கொரோனா, டெங்கு பரவுவதை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி கூறியதாவது: திருவேற்காடு நகராட்சியில் பொது சுகாதாரப்பிரிவின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே சமயம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீர், தேங்கியுள்ள மழை நீரில்தான் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்யும். இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடுகள், குடியிருப்புகள், காலி மனைகள், பழைய வாகனங்கள், மற்றும் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. பயன்பாடு இல்லாத வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.