கவர்னர் மாளிகை நோக்கி 22ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: செல்போன்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக கவர்னர் மாளிகை நோக்கி வரும் 22ம்தேதி காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித்ஷாவை விலகக் கோரியும் நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஜூலை 22ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக கவர்னர் மாளிகை வரை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: