கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமத்தில் பருத்தி சாகுபடியை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்குள்ள விவசாயிகளிடம் கூறுகையில், மாவு பூச்சிகள் பருத்தியை அதிகம் தாக்கி சேதத்தை விளைவிக்கிறது. பருத்தியைத்தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் போன்ற பயிர்களிலும் குரோட்டன்ஸ், நாயுருவி போன்ற செடிகளிலும் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப் பயிரினை நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால் அரண் போல் இருந்து காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகள் வயலினுள் வருவது தடுக்கப்படும்.