வால்பாறை: வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி அடை மழையாக மாறி உள்ளது. இதனால் நள்ளிரவு மற்றும் அதிகாலை அதிக குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர் மின்சக்தி மற்றும் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் மேல் நீராறு அணை, கீழ் நீராறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. மின் உற்பத்தி கழகம் கட்டுப்பாட்டில் அப்பர் ஆழியாறு, மற்றும் காடம்பாறை அணைகள் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் சுமார் 31 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் தமிழகத்திற்கு பாசனம், மின்சாரம் கிடைக்கிறது.