சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்து பெண்ணை வசியப்படுத்த யூடியூப் பார்த்து சூனிய பூஜை: தெலங்கானா மாநிலத்தில் சுவாரஸ்யம்

திருமலை: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி(30). தனியார் நிறுவன ஊழியர். இவர் அவ்வப்போது சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர் திசையில் பெண்கள் பேசினால், அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், ராங்கால் மூலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அந்த பெண்ணிடம் மூன்று மாதங்களாக செல்போனில் பேசி வந்தார். அதன் பிறகு நேரடியாக நாம் இருவரும் சந்திக்க வேண்டும் என்று கூறி இருவரும் நேரில் சந்தித்தபோது, அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதையடுத்து முரளி, அந்த பெண்ணிடம், கணவரை விட்டு விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு கூறினார். அதனை அந்தப் பெண் மறுத்துவிட்டார்.

இதனால் அந்தப் பெண்ணை வசியப்படுத்த திட்டமிட்டு, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி? என்று பார்த்து வந்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள எலும்புகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பொருட்களை எடுத்து சென்று, இரவில் அந்த பெண்ணின் வீட்டின் முன் சூனிய பூஜை நடத்தி உள்ளான். காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் விசாரித்ததில், முரளி பூஜை செய்து வீட்டின் முன் வைத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அப்பகுதியினர் நல்கொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து செல்போன் எண்ணை வைத்து முரளியை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் முரளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: