பாண்டியூர் கிராமத்தில் வேளாண் அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம் : பாண்டியூர் கிராமத்தில் தக்கைப்பூண்டு வயலை வேளாண் உதவி இயக்குநர் ஷேக் அப்துல்லா ஆய்வு செய்தார்.நயினார்கோவில் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உயர்விளைச்சல் செயல் விளக்க திடல்கள் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தக்கைப்பூண்டு, பசுந்தாள் உர சாகுபடி திருந்திய நெல் சாகுபடி நயினார்கோவில் வட்டாரத்தில் வைகை உப வடிநில பகுதிகள் உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக நடப்பு சம்பா சாகுபடி செய்வதற்கு முன் மண்வளத்தை மேம்படுத்தும் தக்கைப்பூண்டு பசுந்தாள் உரப்பயிர் செழித்து வளர்ந்துள்ள பாண்டியூர் கிராமத்தில் உள்ள வயலை வேளாண் துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பசுந்தாள் உரங்களை பயிருக்கு இடும்போது மண்வளம் காக்கப்படுகிறது. பசுந்தாள் உரங்கள் நுண்ணுயிர்கள் மூலம் மட்கப்படுவதால் தழைகளில் உள்ள பேரூட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் வெளியாகி மண்ணில் ஊட்டச்சத்து அளவை கூட்டி பயிர் செழிக்க செய்கிறது. மண்ணில் தழைச்சத்து அதிகரித்து அடுத்து வளரும் பயிருக்கு எளிதில் கிடைக்கும். களர், உவர் நிலங்களில் நன்கு வளர்ந்து நிலத்தை சீராக்கும் மூடு பயிராக வளர்ந்து மண்ஈரம் பாதுகாக்கப்படும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு அதிகரிக்கும் தக்கை பூண்டை 40 முதல் 45 நாளில் சுழல் கலப்பை அல்லது கேக் வில் கொண்டு மடக்கி உழ வேண்டும் என்றார். நயினார்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பானு பிரகாஷ், வேளாண் அலுவலர் நித்யா, உதவி வேளாண் அலுவலர் லாவண்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: