மக்களவை சபாநாயகர் மீது வழக்கு சிராக் பஸ்வான் மனு தள்ளுபடி

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் மீது சிராக் பஸ்வான் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ். ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவரான அவரது மகன் சிராக் பஸ்வானின் தலைமையில் அக்கட்சி பீகார் சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொண்டது. இதில் படுதோல்வி அடைந்தது.  இதையடுத்து, உள்கட்சி பூசலால் சிராக்கை தலைவர் பதவியில் இருந்து விலகும்படி பசுபதியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். மேலும், பசுபதியை கட்சியின் தலைவராக்கியதுடன், சிராக்கை தலைவர் பதவியில் இருந்து நீக்கினர்.

இதைத் தொடர்ந்து, லோக் ஜனசக்தி கட்சியின் மக்களவை தலைவராகவும் பசுபதி அறிவிக்கப்பட்டார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.  இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிராக் வழக்கு தொடுத்தார். இந்த மனு நீதிபதி ரேகா பாலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை,’ என்று கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: