புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் இருந்து செல்லப் பிராணிகளை இந்தியாவிற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சுங்கத்துறைக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை, அனைத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, அவற்றிற்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க பரிந்துரைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாமல் வனவிலங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவது குறித்து சுங்க அதிகாரிகளுக்கு தெரியவந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.