ஆர்டிஐயில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் தருவதா? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில், ‘‘மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்தி தெரியாத, இந்தி படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை விண்ணப்பதாரர்களால் படித்து அறிந்து கொள்ள முடிவதில்லை.

அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுகிறது. இவை அனைத்தையும் விட உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: