பழநி: பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வுப் பணி துவங்க உள்ளதாக ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். பழநியில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்க வந்த ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்பை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் 2.07 கோடி குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் குடும்ப உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அமைந்திருக்கும் ஆட்சி அனைத்துத் தரப்பு மக்களையும் காக்கும் என்ற எண்ணத்தை உறுதி செய்யும் வகையில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உள்ளது. ஆயக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான குளிர்பதன கிடங்கு அமைப்பதற்காக தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.