பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடர் இன்று பிரிஸ்டலில் தொடங்குகிறது. தொடர்ந்து 2வது ஒருநாள் ஜூன் 30ம் தேதி டான்டனிலும், 3வது ஒருநாள் ஜூலை 3ம் தேதி வொர்செஸ்டரிலும் நடைபெற உள்ளன. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடி டிரா செய்தது அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது. கொரோனா பரவலுக்கு பிறகு பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாதது, போதிய பயிற்சி இல்லாதது என சில பின்னடைவுகள் இருந்தாலும், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு அசத்தினர். குறிப்பாக ஷபாலி, மந்தனா, டானியா, தீப்தி, ஸ்நேஹ் ராணா ஆகியாரின் ஆட்டம் அமர்க்களமாக இருந்தது.