ஆபாச பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பப்ஜி மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்..!

சென்னை: பப்ஜி மதனின் 5 யூடியூப் சேனல்கள் முடக்கக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி அதை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலையில்  ஒளிபரப்பு செய்து வந்த மதன் தனது யூ-டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர் சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பப்ஜி மதன் மீது மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கபட்ட புகார்களும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் யூ-டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.யூ-டியூபர் மதன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை பிடிக்கும் பொருட்டு மதனின் தந்தை, அண்ணன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதனின் மனைவி கிருத்திகா மதனுக்கு யூ-டியூப் சேனல் நடத்த உடந்தையாக இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும், மதன் யூ-டியூப் மூலம் மாதம் 7 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி அதன் மூலம் சொகுசுக் கார்கள் மற்றும் சொகுசு பங்களாக்களை வாங்கிக் குவித்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மதனை தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம், பெங்களூர், தர்மபுரி ஆகிய இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பப்ஜி மதன் தர்மபுரி மாவட்டம், மதன்கூன்பாளையம் என்ற இடத்தில் உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதனை மத்திய குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன், கார் போன்றவற்றை பறிமுதல் செய்து வங்கி கணக்குகளையும் முடக்கினர்.

கைது செய்யப்பட்ட மதனை சென்னை அழைத்து வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் மதனை நேற்று மதியம் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவம் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து மதன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் பப்ஜி மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: