ஆரல்வாய்மொழி அருகே செங்கல்சூளையில் வேலை பார்த்த சிறுமி கர்ப்பம்: வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அம்பலம்

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த வட மாநிலத்ைத சேர்ந்த 15 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல் சூளையில் பீகாரை சேர்ந்த குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று விசாரித்தனர். சிறுமியுடன் வந்தவர்களிடம் இது குறித்து கேட்ட போது முதலில் எதுவும் பேச மறுத்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய பின்னர் தான், அந்த சிறுமிக்கும், செங்கல் சூளையில் வேலை பார்க்கும் சிறுமியின் உறவினர் மகன் ஒருவருக்கும் திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் நடத்தி வைத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

Related Stories: