நீலகிரி மாவட்டத்தில் இ - பாஸ் அமல் எதிரொலி!: வெளிமாநில வாகனங்களின் வரத்து குறைந்தது...வெறிச்சோடும் சாலைகள்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு இ - பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு இ - பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தேவையின்றி வருபவர்களின் எண்ணிக்கை குறைக்கும் வகையில் கடந்த வாரம் முதல் இ - பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

இதனால் தமிழக - கர்நாடக எல்லை, கக்கனல்லா பகுதியில் வாகனங்களின் வரத்து வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வரும் காய்கறி, சரக்கு வாகனங்கள் மட்டுமே அதிகளவில் வருகின்றன. பொதுமக்கள் வரும் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. அவ்வாறு வரும் வாகனங்களையும் சோதனை செய்து இ - பாஸ் அனுமதியுடன் வரும் வாகனங்களை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்துள்ளனர். 

முக்கிய காரணங்களை தவிர்த்து தேவையற்ற காரணத்திற்காக மாவட்டத்திற்குள் வர இ - பாஸ் அனுமதி வழங்கப்படாத காரணத்தால் மிக குறைந்த அளவிலான கார்கள் மட்டுமே வருவதாக அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லை பகுதிகளான நாடுகானி, சேரம்பாடி, தாலூர், நம்பியார்க்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பசுமை நுழைவு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories: