நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: மே 13ம் தேதி முதல் துவக்கம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மே 13ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி துவங்கியது. இந்த கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இருநாட்டு உறவு மேம்படும், மீனவர்களிடையே நல்லுறவு ஏற்படும் என்று கூறப்பட்டது. அதன்படி கேரள மாநிலம் கொச்சினில் இருந்து வந்த செரியாபாணி என்ற கப்பல் சில முறை இலங்கைக்கு சென்று வந்தது.

இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கப்பலில் மேலும் சில அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், பயண நேரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மழையை காரணம் காட்டி போக்குவரத்து துவங்கிய 6 நாளிலேயே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மழை முடிந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வரும் மே 13ம்தேதி முதல் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த செரியாபாணி கப்பலுக்கு பதில், இம்முறை அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வருகிறது. இந்த கப்பல் வரும் மே 10ம் தேதி நாகப்பட்டினம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரமாண்டமான சிவகங்கை கப்பல்
சிவகங்கை கப்பல் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்தள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் ரூ.5,000, மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் ரூ.7,000 கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இலங்கை செல்ல விசா கிடையாது என்பதால் இந்த கப்பலில் இலங்கைக்கு செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: மே 13ம் தேதி முதல் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: