கொரோனா பரவலை குறைக்க மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாராட்டு

திருமங்கலம்:  மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி கூடக்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான உதயகுமார் நேற்று ஆய்வு நடத்தினார். மருத்துவ அதிகாரி முருகேசனிடம் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா பரவலை குறைக்க தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்று 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரமாக குறைந்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. தொற்றிலிருந்து நாம் முழுவதுமாக விடுபடவேண்டும் என்றால் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்து அரசுக்கு நன்றாக தெரியும். அது தடுப்பூசி ஒன்றுதான். நோயிலிருந்து பாதுகாக்கும் ஆயுதம் இதுதான். முதல்வரின் அறிவிப்பு படி இதனை மக்கள் இயக்கமாக மாற்ற போதுமான தடுப்பூசிகள் இருக்கவேண்டும். அப்போதுதான் மனித உயிர்களை காக்கமுடியும். தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்’’ என்றார்.

Related Stories: