சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ஓட்டுப்போட வழங்கிய டோக்கனை காட்டி பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சட்டமன்ற தேர்தலில், சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அருள் வெற்றி பெற்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் அருள் எம்எல்ஏவுக்கு ஓட்டு போட டோக்கன் பெற்றவர்கள் பணம் வாங்க அவரது வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் மாம்பழம் பொறித்த ₹2ஆயிரம் ரூபாய்க்கான டோக்கனில் ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும், இன்னொரு பக்கத்தில் ராமதாஸ், ஜிகே.மணி படமும் அச்சிடப்பட்டிருந்தது. கீழ் பகுதியில் அருள் எம்எல்ஏ படமும், அவரது தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.