ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது இயல்பு நிலை திரும்பியதாக மக்கள் நினைக்க வேண்டாம்: ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: ஊரடங்கில்  தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதாக நினைத்து  தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தெரு  விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து, சிவா என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘நாய்களுக்கு 2500 கிலோ உணவு வழங்கப்பட்டு அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 104 குதிரைகளுக்கு 3536 கிலோ கோதுமை  வழங்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் ரூ.19.29 லட்சம் இருப்பில் இருந்து, சென்னை மாநகராட்சிக்கு  ரூ.7.91 லட்சமும், பிற 14 மாநகராட்சிகளுக்கு ரூ.11.84 லட்சமும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையை பார்த்த நீதிபதிகள், விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தனர். பின்னர், நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்திடம், ‘ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே  வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்து கொள்வதாக தெரிகிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை’ என்று  தெரிவித்தனர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் பல இடங்களில்  பிரச்னை ஏற்பட்டது. கடுமை காட்ட வேண்டாம் என்று தற்போது காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம்’ என்றார். இதைக்கேட்ட  நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றி திரியக் கூடாது என்று ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று  அரசுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories: