எய்ட்ஸ் பெண் நோயாளி உடலில் 216 நாளில் 30 முறை உருமாறிய கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: எய்ட்ஸ் பெண் நோயாளி ஒருவரின் உடலில் 216 நாட்கள் வரை தங்கிய கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றம் அடைந்த சம்பவம் ஆய்வாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 36 வயதாகின்றது. இவரது பெயர் வெளியிடப்பட்டவில்லை. இவர் கடந்த சில ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒருவரது உடலில் 15 முதல் 20  நாட்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகின்றது. எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்ணின் உடலில் சுமார் 216 நாட்கள்  தொற்று இருந்துள்ளது.

இந்த காலத்தில் சுமார் 30 முறை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்ணின் உடலில் இருந்த புரத ஸ்பைக்கானது 13 முறை மாற்றம் அடைந்துள்ளது. வைரசில் 19 முறை மரபணு மாற்றம் நடந்துள்ளது. இந்த பெண்ணின் உடலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வகை உருமாற்றம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆபத்து மிகுந்த இந்த வைரஸ்கள் கவலை ஏற்படுத்துவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்ணின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதா என்பது குறித்து சரியான விவரங்கள் தெரியவில்லை.

Related Stories: