சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் அரை நிர்வாணமாக அவர் பாடம் எடுத்த புகைப்படங்களும் வெளியானது. இதனைதொடர்ந்து முன்னாள் மாணவிகள், தற்போது பயின்று வரும் மாணவிகள் என அனைவரும் ரகசியமாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 24ம் தேதி போலீசார் ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜகோபாலனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக், ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.