சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரவாயலை சேர்ந்த சுகன்யா ஜெப சரோஜினி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:சட்டப்படிப்பில் பி.எச்.டி படிப்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 10ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 2 ஆண்டுகள் முதுநிலை சட்ட படிப்பை முடித்தவர்கள்தான் பி.எச்.டி படிப்புக்கு சேர முடியும் என்று பல்கலைக்கழகம் விதி வகுத்துள்ளது. கடந்த 2012ல் பல்கலைக்கழக மானியக்குழு 2 ஆண்டுகள் முதுநிலை படிப்பை மாற்றிவிட்டு ஒரு ஆண்டு முதுநிலை படிப்பை கொண்டுவந்து அறிவித்தது. இதையடுத்து, பல சட்டக் கல்லூரிகள் 2 ஆண்டு முதுநிலை படிப்பை மாற்றி ஒரு ஆண்டாக நடத்தி வருகின்றன.இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாக டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகள் முதுநிலை படிப்புதான் பி.எச்.டி படிப்புக்கு தகுதியானது என்று அறிவித்துள்ளது.