அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தம்பி ஓ.பாலமுருகன் உடல் நலக்குறைவால் காலமானார் : தலைவர்கள் இரங்கல்

பெரியகுளம் : அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர் பாலமுருகன் (61). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ஒரேயொரு மகள் உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்கு அக்கரஹாரம் பகுதியில் பாலமுருகன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மேலும், விவசாயம் மற்றும் பால்பண்ணை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு உடல் நலம் தேறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல் நிலை மோசமானதால் நேற்று இரவு அவர் பெரியகுளத்திற்கு கொண்டு வரப்பட்டார். இன்று காலை 4 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அவர் பெரியகுளத்திற்கு வந்தார்.

Related Stories: