நாகை அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் அவதி

நாகை: நாகை அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை நாகை மாவட்டத்திலும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல், கீழ்வேலூர், திட்டச்சேரி, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாகை நகரில் மட்டும் நேற்று ஒரேநாளில் 459 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சுகாதாரப்பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

நாகை அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வார்டு நிரம்பி வழிவதால் மருத்துவப்பணியாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொற்றுநோயின் தீவிரம் அதிகரித்துள்ளதால் உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக சுகாதாரப்பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: