புதுடெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திலிருந்து குறைந்துள்ளது. இதே போல பலி எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தை தொட்ட நிலையல் கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து பதிவானது. இதே போல பலி எண்ணிக்கையும் முதல் முறையாக 4 ஆயிரத்தை தாண்டியது. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சற்று சரியத் தொடங்கி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்திலிருந்து குறைந்து 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 ஆக பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,754 கொரோனா இறப்புகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 45 ஆயிரத்து 237 ஆக உள்ளது. இதுவரை 1 கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 222 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு, பலி குறைந்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் ேநற்று ஒரே நாளில் 596 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.