திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் நோயாளிகள், உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
திண்டுக்கல் ஜிஹெச்சில் தினமும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஜிஹெச்சில் இடமில்லாமல் கல்லூரிகள் பலவற்றை கொரோனா வார்டாக மாற்றி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் ஜிஹெச் பிரசவ வார்டு அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வார்டு அருகே கழிவுநீர் ஆறாக ஓடுவதால், இதை மிதித்து கொண்டுதான் நோயாளிகளும், உறவினர்களும் வார்டுக்குள் வர வேண்டிய உள்ளது. இதனால் வார்டு, வளாகம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
நோய் தீர்க்க வந்தவர்களுக்கு, நோய் தரும் மையமாக ஜிஹெச் மாறியதால் நோயாளிகளின் உறவினர்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து டீன் விஜயகுமாரிடம் புகார் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சியில் புகார் தெரிவித்தனர், ஊழியர்கள் விரைவில் வந்து அடைப்பை சரிசெய்து கழிவுநீர் முறையாக செல்ல வழிவகை செய்வர் என நோயாளிகளிடம் கூறினார்.