தபால்வாக்கு விவகாரம் முடியும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்யக் கூடாது: தேர்தல் அதிகாரிக்கு முத்தரசன் கடிதம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்துள்ளது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கிய பிரச்னை, தபால்வாக்கு விவரங்களை முழுமைப்படுத்தாத நிலையில், மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கையை நிறைவு செய்யக் கூடாது என்பது தொடர்பானது.

இதில், தபால் வாக்கு விவரங்களை அறிவித்த பின்னர் தான் கடைசி சுற்றும், அதற்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கையேட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் திட்டவட்டமாக பின்பற்றப்பட வேண்டும். அடுத்து வாக்கு எண்ணிக்கை சார்பற்ற நடுநிலையோடு, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை, அரசியலமைப்பு அதிகாரத்துடன் தற்சார்பு அமைப்பாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதில் எந்தவொரு நிலையிலும் சந்தேகத்தின் நிழல் தேர்தல் ஆணையம் மீது விழுந்து விடாமல் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.

Related Stories: