வேறு எந்த வடிவிலும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கக்கூடாது ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி வழங்கலாம்: கனிமொழி எம்பி பேச்சு

சென்னை: வேறு எந்த வடிவிலும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்கக்கூடாது என்றும், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி வழங்கலாம் என்றும் கனிமொழி எம்பி பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: நாடு முழுவதும், ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ‘ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை’ மட்டும் இயக்கி, மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல.

நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள். உச்ச நீதிமன்றமே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தை பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம் மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான். ஆகவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில், இந்த அனுமதி தற்காலிகமானதாக இருக்க வேண்டும். அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: