குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

தா.பழூர் : குடிநீர் வராததை கண்டித்து குழாய் முன் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இருகையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேணாநல்லூர் கிராமத்திலுள்ள 5️ மற்றும் 6-வது வார்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் அதிருப்தி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் வருகின்ற குழாய் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்னையை உடனே சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: