திம்பம் மலையில் லாரி பழுது: தமிழகம்- கர்நாடகம் இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய  திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மைசூரிலிருந்து தமிழகம் நோக்கி சென்ற சரக்கு லாரி திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதைத் தொடர்ந்து ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி அளவில் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. லாரி பழுதாகி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: