மயாமி ஓபன் டென்னிஸ் ஆஷ்லி பார்தி மீண்டும் சாம்பியன்

மயாமி: பிரபல டென்னிஸ் தொடரான மயாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் மோதிய ஆஷ்லி, 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். காயம் காரணமாக இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பியான்கா தடுமாறியதால், 2வது செட்டிலும் ஆஷ்லி ஆதிக்கம் செலுத்தினார். அவர் 6-3, 4-0 என முன்னிலை வகித்த நிலையில், தொடர்ந்து விளையாட முடியாததால் போட்டியில் இருந்து பியான்கா விலகினார். இதைத் தொடர்ந்து, ஆஷ்லி பார்தி மயாமி ஓபனில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 2019ல் ஆஷ்லி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தொடர் ரத்தானது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் ஆஷ்லி தனது 2வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற 10வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டமாகும்.

Related Stories: