திருச்சி: கல் நெஞ்சக்காரர் விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மறைந்த மருத்துவரின் மனைவி பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்தது. அதன்படி, தருமபுரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தார்.
பணியிடமாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் லட்சுமி நரசிம்மன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள், குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விராலிமலை தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அவர் பின்னாடியே அலைந்தார் எனது கணவர். பெண் மருத்துவர்களை ஏன் டிரான்ஸ்பர் பண்றீங்க..
அவர்களை ஏன் டார்கெட் பண்றீங்க.. என்ன டார்க்கெட் பண்ணுங்க.. என்ன சஸ்பெண்ட் பண்ணுங்க.. என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்யங்க.. பெண் மருத்துவர்களை எதுவும் செய்யாதீங்க.. அவங்களை விட்டுடுங்க.. என்பதுதான் அவரின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் கல் நெஞ்சக்காரர் விஜயபாஸ்கர் அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. அதிகாரம் மற்றும் ஆணவத்தில் எடப்பாடி மற்றும் விஜயபாஸ்கர் சேர்ந்து செய்த அட்டூழியத்தால் எனது கணவர் 2020 பிப்ரவரி 7ம் தேதி மரணம் அடைந்தார். அந்த இழப்பில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. உங்க ஓட்டை பார்த்து போடுங்க. விஜயபாஸ்கர் திரும்ப வந்தா எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு போய்விடும். நிர்கதியா போய்விடும். எனது கணவர் அடக்கம் செஞ்ச இடத்திற்கு கூட விடமாட்றாங்க. உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கு. அதனால மன்றாடி கேட்கிறேன்... மன்றாடி கேட்கிறேன்... பார்த்து ஓட்டு போடுங்க... எங்களை போன்ற லட்சக்கணக்கானவர்கள் செத்துட்டு இருக்கோம்... பார்த்து ஓட்டு போடுங்க.. எங்களை காப்பாத்துங்க... இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார். ஊதிய உயர்வு கோரிக்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறாத நிலையில் மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.