சென்னை: வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் மூலம் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் மனு கொடுத்துள்ளார். இதை தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆர்.நீலகண்டன் மற்றும் ஜெ.பச்சையப்பன் ஆகியோர் தமிழக இணை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்த்திடம் நேரில் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும்- அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள், குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், நேற்று இரவு பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வாக்காளர்களிடம் இருந்து அவர்களது அடையாள அட்டை விவரங்களையும்; அவர்களது செல்பேசி எண்களையும் பெற்று வருகின்றனர்.