ஆதரவு அளிப்பது மட்டுமல்ல இனி ஆட்சியிலும் பங்கேற்போம்: மத்திய அமைச்சர் பேச்சால் அதிமுகவினர் ஷாக்

விருதுநகர்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், அதில் பாஜ பங்கேற்கும் என மத்திய அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் பாஜ வேட்பாளர் பாண்டுரெங்கனை ஆதரித்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் ஆதரவு மட்டும் தெரிவிப்பீர்களா? பங்கெடுப்பீர்களா’’ என்றனர். அதற்கு அவர், ‘‘அதிமுக ஆட்சிக்கு ஏற்கனவே ஆதரவாகத்தான் உள்ளோம். இனி ஆட்சியில் பங்கெடுப்போம்’’ என்றார்.

‘‘2016ல் ஜெயலலிதா நான் ஏற்கனவே செய்த தவறை (பாஜவுடன் கூட்டணி) மீண்டும் செய்ய மாட்டேன்’’ என கூறியது பற்றி கேட்டதற்கு, ‘‘2016 சென்று விட்டது. ஜெயலலிதாவும் சென்று விட்டார். நடக்க இருப்பதை பார்ப்போம்’’ என்றார். மத்திய அமைச்சர் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், அதில் பங்கேற்போம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: