திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சார்பில் அடையாள அணிவகுப்பு நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ல் நடக்கிறது. தேர்தலின்போது கலவரம் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் அடையாள அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூருக்கு நேற்று வந்த எல்லை பாதுகாப்பு படையினர், நகர் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர். அவர்களுடன் திருவில்லிபுத்தூர் போலீசாரும் இணைந்து சென்றனர்.