பல்லாவரம் தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று பழைய பல்லாவரம், ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மல்லிகா நகர், ஜமீன் பல்லாவரம், தர்ஹா சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, ரோட்டோர டீக்கடையில் பஜ்ஜி விற்பனை செய்யும் பெண்ணிடம் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த கடையில் வாழைக்காய் பஜ்ஜி சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வாக்கு சேகரித்தார்.

பின்னர், அவர் பேசுகையில், “இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500, வாஷிங்மெஷின், சூரிய சக்தி அடுப்பு, ஆண்டிற்கு விலையில்லா 6 காஸ் சிலிண்டர், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற அனைத்து திட்டங்களையும் நிச்சயம் பெற்று தருவேன்,’’ என உறுதியளித்தார். இதற்கு, அங்கிருந்த பொதுமக்கள் ‘‘எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கே, நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்’’ என உறுதியளித்து அவரை வாழ்த்தி அனுப்பினர். இந்த பிரசாரத்தில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: