திருவாரூர் மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் நடைபாதை பாலம் சேதம்-புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை

*மக்களின் குரல்

திருவாரூர் : திருவாரூர் மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் நடைபாதை பாலம் சேதமடைந்து இருப்பதால் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருந்து தஞ்சை சாலையை இணைக்கும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே நடைபாலம் ஒன்று கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது வரையில் புழக்கத்தில் இருந்து வருகிறது.

தற்போது திருவாரூர் நகரம் மாவட்ட தலைநகரம் என்பதால் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மடப்புரம் நடைபாலம் என்பது அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, தாலுகா அலுவலகம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உட்பட பலவற்றிற்கும் இந்த நடைபாலமானது முக்கிய பாலமாக இருந்து வருகிறது. மேலும் பெயரளவில் நடைபாலம் என்ற போதும் இந்த நடைபாலத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்த பாலம் என்பது கடந்த 2 வருடத்திற்கு மேலாக கைப்பிடி சுவர் உட்பட பல்வேறு இடங்களில் பழுதடைந்து இருந்து வருகிறது. இந்த பாலத்தினை அகலப்படுத்தி கட்டித்தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக நகர மக்களும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் அரசு அலுவலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தற்போது புதிய பஸ் நிலையம் என்பது தஞ்சை சாலை ஒட்டியவாறு மாற்றப்பட்டுள்ளதால் இதற்காக தற்போது இந்த பாலத்தினை அதிகம் பேர் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

எனவே இந்த நடைபாலத்தினை அகலப்படுத்தி புதிதாக கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும், அரசு அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: