புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதுடன், விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் நடுகள வரிசையில் களமிறங்கி அசத்துபவர் ஷ்ரேயாஸ் அய்யர் (26). இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியின் 8வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ அடித்த பந்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார் ஸ்ரேயாஸ். அப்போது தடுமாறி விழுந்தவரின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவதிப்பட்ட அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் ஷுப்மன் கில் பீல்டிங் செய்தார். பின்னர் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது தோள்பட்டை எலும்பு விலகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வுடன் சிகிச்சை தேவை என்பதால் எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். தொடரில் இருந்து விலகியுள்ள ஷ்ரோயாஸ், சிகிச்சைக்குப் பின்னர் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெறுவார். உடல் தகுதியை நிரூபித்த பிறகே மீண்டும் அணியில் இணைய முடியும்.