புதுடெல்லி: கொரானோ பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி நாடு முழுவதும் முதல் முறையாக பிரதமர் மோடி ஜனதா ஊரடங்கு எனும் ஒருநாள் ஊரடங்கை அறிவித்தார். தற்போது ஓராண்டு ஆகியும் கொரோனாவின் கோரம் குறைந்தபாடில்லை. கடந்த 2 நாளில் நாடு முழுவதும் 90,797 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா காலடி எடுத்து வைத்த நிலையில், மார்ச் மாதம் அதன் வேகத்தை அதிகரித்தது. பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா ஊரடங்கு எனும் மக்கள் ஊரடங்கை அறிவித்தார். கொராேனாவுக்காக விதிக்கப்பட்ட நாடு தழுவிய முதல் ஊரடங்கு இதுவே. அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. அத்தியவாசியத் தேவையைத் தவிர வேறெதற்கும் மக்கள் வெளியில் வரவில்லை. மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முற்றத்தில், பால்கனியில் நின்று கொண்டு கை தட்டி, 5 நிமிடம் மணியோசை எழுப்பி மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை செலுத்த பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்பின் மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின் பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது.