நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு நடத்தப்படும்: மநீம தேர்தல் அறிக்கையில் தகவல்

கோவை: கோவையில்  உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்: கல்வித்தர மேம்பாட்டுக்கு ஒட்டு மொத்த தமிழக பொருளாதார உற்பத்தி மதிப்பில் 6 சதவீதம் ஒதுக்கப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் தரமான இலவச கல்வி லட்சியம். அதை தமிழ்நாட்டின் கடனை அடைத்த பிறகுதான் படிப்படியாக அந்த இலக்கு அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். சென்னையில் டாக்டர் கலாம் அறிவுசார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

விவசாயம், தொழில்துறை மற்றும் உற்பத்தி துறை, சேவைத்துறையின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்து 15 முதல் 20 சதவிகித வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையாக தொடர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரம் ரூ.70 லட்சம் கோடி அளவில் உயர்த்தப்படும். தனிநபர் வருமானத்தை ரூ.7 லட்சம் முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்படும். தமிழகத்தின் ₹5.7 லட்சம் கோடி கடனை அடைக்கும் விதத்தில், பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படும். விவசாயம், தொழில் துறையில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கி வரி இல்லா வருமானத்தை உறுதி செய்து, அதன்மூலம் தமிழ்நாட்டின் கடனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் வரிக்கு நிகரான வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். முதல் 3 ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கும் தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் சீரமைக்கப்படும். அதில் பணியாற்றும் பணியாளர்களை அதன் பங்குதாரர்களாக்கப்படுவார்கள். மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும், மாநில பட்டியலில் இருக்கும் விவசாயத்தை, மாநில அரசின் விவசாய மேம்பாட்டு சட்டமியற்றி தமிழக விவசாயிகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில நுழைவுத் தேர்வு (சீட்) நமது பாடத்திட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இது போன்று பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

Related Stories: